கரூர் அமராவதி ஆற்றின் இருகரையையும் தொட்டு செல்லும் தண்ணீர்


கரூர் அமராவதி ஆற்றின் இருகரையையும்   தொட்டு செல்லும் தண்ணீர்
x
தினத்தந்தி 15 Nov 2022 7:10 PM GMT (Updated: 15 Nov 2022 7:28 PM GMT)

அமராவதி அணையில் இருந்து 2,238 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கரூர் அமராவதி ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.

கரூர்

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

8,852 கனஅடி நீர்

இந்தநிலையில் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2,442 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து 2,238 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 8,852 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டுபடி தண்ணீர் செல்கிறது. இதனை கரூர் அமராவதி பாலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்து செல்கின்றனர்.


Next Story