மீன் பிடிக்க சென்றபோது புழல் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு


மீன் பிடிக்க சென்றபோது புழல் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 4:23 AM GMT (Updated: 16 Nov 2022 5:49 AM GMT)

புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (வயது 23). இவர் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12-ந் தேதி நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கால் இடறி ஏரியில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் ஓடிச்சென்று இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து ஏரியில் இறங்கி ஏரியில் மூழ்கிய பரத்குமார் உடலை தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக உடலை தேடி வந்த தீயணைப்பு துறையினர், நேற்று மாலை புழல் ஏரிக்கரை அருகே கரை ஒதுங்கிய பிணத்தை கைப்பற்றினர். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story