நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணிக்கு தங்கப்பதக்கம்


நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணிக்கு தங்கப்பதக்கம்
x

மாநில கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் அணியை மாவட்ட கலெக்டர் உமா வாழ்த்தினார்.

நாமக்கல்

மாநில கால்பந்து போட்டி

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான 8-வது விளையாட்டு போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் கால்பந்து மற்றும் கபடி போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த மாணவிகள் சிறப்பாக விளையாடி கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கத்தையும், கபடி போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று உள்ளனர். நாமக்கல் விளையாட்டு விடுதி கால்பந்து மாணவிகள் தொடர்ந்து 8-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டர் வாழ்த்தினார்

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உமாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர், இதே போன்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், பயிற்சிகளில் தனிக்கவனம் செலுத்தி, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, கோ-கோ மற்றும் கபடி பயிற்றுனர் புவனேஸ்வரி, கால்பந்து பயிற்றுனர் சதிஸ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story