புதுக்கோட்டையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்


புதுக்கோட்டையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்
x

புதுக்கோட்டையில் தனிப்படை போலீசார் 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அதிரடி ரோந்து சென்று சம்பந்தப்பட்டவர்களை பிடித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இலுப்பூரை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 21), புத்தாம்பூரை சேர்ந்த ஜெயசூர்யா (20), பெருஞ்சுனையை சேர்ந்த செந்தில்குமார் (41) ஆகிய 3 பேரை பிடித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.

3 பேர் கைது

இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் மீண்டும் அதிரடி காட்டியுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். ஆபரேஷன் 3.0 என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story