தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகள் தயார்


தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகள் தயார்
x

தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகள் தயார்

திருவாரூர்

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் எண்கண் வெட்டாறு கதவணை வழியாக மழைநீர் கூடுதலாக வெளியேற்றப்படும். அந்த கதவணை வழியாக தற்போது 796 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த கதவணையினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கதவணை பொறியாளரிடம் நீரோட்ட அளவினை கேட்டறிந்ததோடு, நீரோட்டத்தினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு, இக்குழுக்கள் மூலம் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் சவுக்கு மரங்கள் தயார்

மேலும் தாழ்வான பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 மணல் மூட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும், 5000 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் நீரோட்டங்களை நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 106 மரம் அறுக்கும் எந்திரம், 116 பொக்லின் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இப்புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் துறைவாரியாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story