நூதன முறையில்வாலிபரிடம் இணையவழி மூலம் ரூ.1¾ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


நூதன முறையில்வாலிபரிடம் இணையவழி மூலம் ரூ.1¾ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)

நூதன முறையில் வாலிபரிடம் இணையவழி மூலம் ரூ.1¾ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

பகுதிநேர வேலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உப்புவேலூரை சேர்ந்தவர் விக்ரம் (வயது 23). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர், பகுதிநேர வேலை விஷயமாக ஒரு லிங்கை அனுப்பினார்.

இதைப்பார்த்த விக்ரம், அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனாளர் முகவரி, பாஸ்வேர்டு பதிவு செய்தார். பின்னர் டெலிகிராம் ஐடியில் இருந்து தொடர்புகொண்ட நபர், விக்ரமிடம் நீங்கள் சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.

வாலிபரிடம் பணம் மோசடி

இதை நம்பிய விக்ரம், தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே மூலம் ரூ.100 செலுத்தி ரூ.221-ஆக லாபம் பெற்றுள்ளார். பின்னர் ரூ.500-ஐ இரு தவணைகளாக செலுத்தி ரூ.1,254-ஐ லாபமாக பெற்றார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து விக்ரம், தனது போன்பே, பேடிஎம், கூகுள்பே மூலமாக ரூ.1,60,259-ஐயும் மற்றும் தனது நண்பர் வெங்கடேசின் கூகுள்பே மூலம் ரூ.3,840-யும், மற்றொரு நண்பரான சரத்சந்திரனின் கூகுள்பே மூலம் ரூ.20,299-யும் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 398-ஐ 28 தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், விக்ரமுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து விக்ரம், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story