அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு


அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு
x

வேதாரண்யம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு ஊராட்சி சார்பில் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது.

ரூ.1 லட்சம் காப்பீடு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியில் உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவில் கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஊராட்சி சார்பில் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் அறிவித்தார். இந்த நிலையில் அரசு அங்கு பணிபுரியும் டாக்டர் நிலவழகி, கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காப்பீடு வழங்கும் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராட்டு

அதன்படி அனைத்து குழந்தைகளுக்கும் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கருப்பம்புலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் கரும்பம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகணபதி (வயது34) என்பவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ரூ.1,000 வழங்கினார். மேலும் ஊராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் காப்பீட்டுக்கான சான்றிதழையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் நிலவழகி, செவிலியர்கள் சரண்யா, சித்திரதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த காப்பீடு வழங்கும் திட்டம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சையை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story