1½ கி.மீ. தூரம் நடந்து சென்று கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பொதுமக்கள்

தண்ணீர் எடுக்க 1½ கி.மீ. தூரம் நடக்கும் பொதுமக்கள்
குன்றி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் சுமார் 1½ கி.மீ. தூரம் பொதுமக்கள் நடந்து சென்று கிணற்றில் தண்ணீர் எடுக்கும் அவலம் உள்ளது.
ஆழ்குழாய் கிணறு
டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் அருகே உள்ளது குன்றி ஊராட்சி. இப்பகுதிகளையொட்டி கோவிலூர், கோம்பை தொட்டி, மாகாளிதொட்டி, நாயகன் தொட்டி, கிளை மன்ஸ்தொட்டி, அணில்நத்தம், ஆனந்த்நகர், கோம்பையூர், குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது.
இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க பெரிய குன்றி, கிணத்து தொட்டி, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் பழுது
இதன் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொது குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு் வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் மோட்டார் பழுதானது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'ஆழ்குழாய் மோட்டார் பழுதால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிடிக்க முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1½ கி.மீ. தூரம் நடந்து சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகிறோம். இதனால் சிரமமாக உள்ளது. உடனே பழுதான ஆழ்குழாய் மோட்டாரை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
----