வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.10¼ லட்சம் மோசடி

முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.10¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது
கோவை ஒண்டிப்புதூர் கம்பன்நகரை சேர்ந்தவர் கோகுலகிருஷ் ணன் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் எலெக்டிரிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு லிங்க் வந்தது.
அதில் ஆன்லைனில் வரும் யூடியூப் லிங்கிற்கு கொடுக்கும் ஒவ்வொரு லைக்கிற்கும் ரூ.150 தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை நம்பி அவர், அந்த யூடியூப் லிங்கிற்கு லைக் கொடுத்து உள்ளார். இதனால் அவரது கணக்கிற்கு ரூ.1000 வந்து உள்ளது.
இதனால் ஆர்வம் அடைந்த கோகுலகிருஷ்ணன் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களை பெற்றார். அப்போது கூடுதல் தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி உள்ளனர்.
இதனால் தனக்கு அதிக லாபம் வரும் என்று கருதி கோகுலகிருஷ்ணன் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10¼ லட்சத்தை அனுப்பி முதலீடு செய்து உள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவருக்கு முதலீடு செய்த பணம் திரும்ப வரவில்லை. இது குறித்து கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






