மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேர் கைது


மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேர் கைது
x

மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு ஆதனூர் மெயின் ரோடு ராகவேந்திரா நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தனர்.

இதுபற்றி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை தொடர்பாக முகமது யாகூப் (35), முகமது ரியாஸ் (32), முகமது இம்ரான்கான் (21), முகமது ரியாசுதீன் ( 25), முகமது சதாம் உசேன் (25), பிரவின்குமார் (24), மாறன் என்ற மணிமாறன் (25), மோகன்ராஜ் ( 20), தனுஷ் (26), முகமது பஷா (21) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இவர்களில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற தனுஷுக்கு வலது கால், சதாம் உசேனுக்கு இடது கை, மோகன்ராஜூக்கு வலது கையும், அகமது பஷாவுக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும் விசாரணையில் கடந்த ஆண்டு முகமது யாகூப்பின் தம்பிகள் இருவர் கொலை செய்யப்படுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தான் காரணம் எனவும், அந்த முன்விரோதத்தில் வெங்கடேசனை வெட்டிக் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைதானவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள், 9 கத்திகளை போலீசார் கைப்பற்றினர்.


Next Story