வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்

கடலூர்,

விருத்தாசலம் பாலக்கொல்லையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சங்கர் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகத சிறுமியிடம் பழகி வந்தார். அவர் அந்த பகுதியில் விறகு எடுக்க போகும் போதெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

அதற்கு அவர் மறுத்து அவரிடம் இருந்து விலகி சென்றுள்ளார். கடந்த 15.2.2015அன்று அதேபோல் விறகு எடுக்க சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சங்கர், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதை பயன்படுத்தி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குழந்தை பிறந்தது

இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியானார். இதை அறிந்த அந்த சிறுமி, சங்கரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து 5.7.2015 அன்று அந்த சிறுமி தனது பெற்றோருடன் சங்கர் வீட்டுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள மீண்டும் வற்புறுத்தினார். அப்போது அவரை சங்கர், அவரது தந்தை ஆறுமுகம், தாய் கொளஞ்சி ஆகிய 3 பேரும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இது பற்றி விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நடக்கும் போதே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

10 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது குழந்தை நலன் கருதி, நல வாழ்வு நிதியில் இருந்து கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இவ்வழக்கில் ஆறுமுகம், கொளஞ்சி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார்.


Next Story