மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள்


மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள்
x

மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.

காஞ்சிபுரம்

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் இரவு நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரங்களுடன் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மரகத பூங்காவில் நடந்தது. இதற்கு தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிக்காக வாஸ்து பூஜையுடன் செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினர்.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக மும்பை சன்வின் நிறுவனத்தினர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து அரசு, தனியார் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டத்தை அமைக்க உள்ளனர். இந்த பூங்கா ஒளிரும் விளக்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்பி புகைப்படம் எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 5 டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2½ ஏக்கர் பரப்பளவில் கலைநயமும் இணைந்து தொழில்நுட்பத்தின் கைவண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க உள்ளது.

மேலும் மாமல்லபுரத்தில் மத்திய அரசின் மூலம் சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சிற்பத்தின் மீது 3 டி லேசர் ஒளிக்கற்றை கொண்டு ஒலி, ஒளி காட்சி நடத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் வெ.விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர்கள் எம்.வி.மோகன்குமார், லதாகுப்புசாமி, வள்ளிராமச்சந்திரன், கெஜலட்சுமி கண்ணதாசன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story