100 சதவீத மானியத்தில் குழாய் கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்


100 சதவீத மானியத்தில் குழாய் கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் குழாய்கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்திட 2021-2022-ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துதர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 1997 ஊராட்சி கிராமங்களில் உள்ள பாதுகாப்பான குறு வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சாதிச்சான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்(அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்திட வேண்டும்.

6 குறுவட்டங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, திருக்கோவிலூர், திருநாவலூர், வெள்ளிமலை ஆகிய 6 பாதுகாப்பான குறுவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் விழுப்புரம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் (வேளாண்மைபொறியல்துறை), உதவி செயற்பொறியாளர் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரை இறைப்பதற்கு மின்சார சக்தி, சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை நிறுவுதல், பாசன தண்ணீரை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கூடுதல் செலவு

இத்திட்டம் பிரதம மந்திரி நீர்ப்பாசனத்திட்டம்- ஒவ்வொரு வயலுக்கும் நீர்- நிலத்தடி நீர் பாசனத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுத்தப்படும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்துக்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ அதற்கான கூடுதல் செலவை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன் பெறும் வகையில் பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மைப்பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story