100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை; 10 நடிகைகளுடன் உல்லாசம் சிக்கிய போலி போலீஸ்


100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை; 10 நடிகைகளுடன் உல்லாசம் சிக்கிய போலி போலீஸ்
x

போலீஸ் என கூறி 100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை; 10 நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் காரில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவியிடம் போலீஸ் என கூறிய நபர் ஒருவர் 4 பவுன் நகைகளையும், அதே போல் வெள்ளவேடு பகுதியில் காரில் பேசி கொண்டிருந்த மற்றொரு ஜோடியிடம் 6 பவுன் நகையும் பறித்து சென்றதாக பூந்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் அந்த நபரை பிடிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நகை பறிக்க வந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சிவராமன் (வயது 38) என்பதும், இவர் நெடுஞ்சாலைகளில் காரில் அமர்ந்திருக்கும் ஜோடிகளிடம் தான் போலீஸ் என கூறி மிரட்டி நகை பறித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், காதல் ஜோடிகளிடம் பறித்த நகைகளை விற்பனை செய்து துணை நடிகைகளிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததும் அம்பலமானது.

இவர் மீது செங்கல்பட்டு, தாம்பரம், கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற 45 வழக்குகள் இருப்பது உறுதியானது.

சிவராமன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தாலுகா சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவன் நான். கடந்த 8 ஆண்டுகளாக செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை குறிவைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்தேன்.

அந்த வகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கிடைக்கும். கடந்த மாதம் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு கடந்த 8ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தேன். ஐடி ஊழியர்கள் மற்றும் பூந்தமல்லி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் தங்களது காதலியுடன் புறவழிச்சாலை சர்வீஸ் சாலைகளில் நின்று வெகு நேரம் பேசுவதால் அந்த இடத்தை தேர்வு செய்தேன்.

போலீசாரின் திட்டத்தில் சிக்கினேன்.இதுவரை திருட்டு, செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என மிரட்டி வழிப்பறி செய்த வகையில் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளேன். அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளையடித்து உள்ளேன்.

காதல் ஜோடிகள் புகார் அளிக்காததால் இது எனக்கு சாதகமாக இருந்தது.என்னால் பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்கள் வகையில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 45 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் புகார் அளிக்காமல் சென்ற காதல் ஜோடிகளால் 50க்கும் மேற்பட்ட வழக்கில் இருந்து நான் தப்பித்து வந்துள்ளேன்.

எனக்கு சிறு வயதில் இருந்து நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பல லட்சம் செலவு செய்து நட்சத்திர ஓட்டல்களில் ரூம் எடுத்து, பாலியல் புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பேன்.

நான் இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்துள்ளேன். பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்துள்ளேன்.

எனக்கு பிடித்த மாதிரி நடப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் பணத்திற்கு மேல் ரூ.10 ஆயிரம் அள்ளி கொடுப்பேன். அதிகளவில் 4 எழுத்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளேன்.

நான் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் என்னை பார்க்க மாட்டார்கள். ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

நடிகைகளுடன் ஒன்றாக இருப்பதற்காகவே தொடர் வழிப்பறியில் தனி நபராக எந்த கூட்டும் இல்லாமல் செய்து வந்தேன். எனக்கு என்று எந்த பணத்தையும் வைத்திருக்க வில்லை. கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நடிகைகளுக்காகவே செலவு செய்து வந்தேன். இவ்வாறு சிவராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீ சார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், தான் உல்லாசமாக இருந்த சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளின் பட்டியலை கொடுத்துள்ளார். அந்த வகையில் முன்னணி சின்னத்திரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளின் பெயர் பட்டியலை பார்த்து போலீசாரே வியப்படைந்து உள்ளனர்.புகைப்படம் மற்றும் சில ஆதாரங்களின்படி 10 முன்னணி நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story