அரவைக்காக 1,000 டன் நெல்


அரவைக்காக 1,000 டன் நெல்
x

தஞ்சையில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடைநெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்படடி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும். இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்தநிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டது. மொத்தம் 1000 டன் நெல் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்த 1,000 டன் நெல் அரவைக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story