108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 6 Oct 2022 6:34 PM GMT (Updated: 6 Oct 2022 7:45 PM GMT)

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி காவ்யா (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவ்யா பிரசவத்திற்காக பாடாலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவ்யாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காவ்யா பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் விஜயகோபாலபுரம் அருகே செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் டிரைவர் அருள்குமார் வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் சித்திரைவேல் பிரசவம் பார்த்தார். இதில் காவ்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் நலமாக உள்ளனர்.


Next Story