10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
x

16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியாகிறது. தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட உள்ளன.

சென்னை,

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார்7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன்பெல்லாம், 10, 12-ம் வகுப்புக்கு வெவ்வேறு நாட்களில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த முறை ஒரே நாளில் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது. அதன்படி, காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பிற்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகின்றன.

செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள்

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட உள்ளது.


Next Story