10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: விழுப்புரம் மாவட்டத்தில் 91.99 சதவீதம் தேர்ச்சி


10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு:  விழுப்புரம் மாவட்டத்தில் 91.99 சதவீதம் தேர்ச்சி
x

விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 91.99 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம்


தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு நடந்தது.

இந்த தேர்வை செஞ்சி கல்வி மாவட்டத்தில் 73 பள்ளிகளில் இருந்தும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 109 பள்ளிகளில் இருந்தும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 179 பள்ளிகளில் இருந்தும் ஆக மொத்தம் 361 பள்ளிகளில் இருந்து 12,494 மாணவர்களும், 12,240 மாணவிகளும் என மொத்தம் 24,734 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

91.99 சதவீதம் தேர்ச்சி

இதில் 11,062 மாணவர்களும், 11,692 மாணவிகளும் என மொத்தம் 22,754 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.54, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.52. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.99 ஆகும்.

கடந்த 2020-21, 2019-20-ம் கல்வியாண்டுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் 10-ம் வகுப்பு தேர்வில் 93.85 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை காட்டிலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 1.91 சதவீதம் குறைந்துள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது பெற்றுள்ள இந்த தேர்ச்சியின் மூலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது கல்வித்துறை அதிகாரிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story