10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடக்கம்


10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடக்கம்
x

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் தேர்வினை 17,891 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர்

10-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 41 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களிலும் அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.

அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

17,891 பேர் எழுதினர்

பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

தேர்வினை 8,033 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 116 மாணவர்களும், 44 மாணவிகளும் என மொத்தம் 160 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் 186 பள்ளிகளை சேர்ந்த 5,192 மாணவர்களும், 4,864 மாணவிகளும் என மொத்தம் 10,056 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். தேர்வினை 9858 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 128 மாணவர்களும், 70 மாணவிகளும் என மொத்தம் 198 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு தேர்வு தமிழ் தேர்வினை மொத்தம் 17,891 மாணவ, மாணவிகள் எழுதினர்.

358 பேர் வரவில்லை

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தமிழ் தேர்வினை எழுத மொத்தம் 358 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன. மாவட்டங்களில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும் மற்றும் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூடுதல் துறை அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

பறக்கும் படையினர் கண்காணித்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு 12 வழித்தடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு 12 வழித்தடங்களிலும் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 60 பறக்கும் படையினரும், அரியலூர் மாவட்டத்தில் 70 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கி தேர்வு, மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.


Next Story