10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆரல்வாய்மொழியில் செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

10-ம் வகுப்பு மாணவி

ஆரல்வாய்மொழி வடக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம். இவர்களது மகள் ரம்யா(வயது15). முத்துகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து தங்கமும், மகள் ரம்யாவும் தனியாக வசித்து வந்தனர். ரம்யா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ரம்யா அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதை தங்கம் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் ரம்யா செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த தாயார் தங்கம், படிக்காமல் கேம் விளையாடுகிறாயா? என்று மகளை கண்டித்துள்ளார். உடனே, ரம்யா செல்போன் பார்ப்பதை நிறுத்தி விட்டு குளிக்கப்போவதாக கூறி வீட்டின் மாடிக்கு சென்றார்.

குளிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வெளியே வராததால் தங்கம் மாடிக்கு சென்றார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகமடைந்த தங்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, ரம்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட தங்கம், மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததில் மனமுடைந்த ரம்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சோகம்

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவி ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனில் கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story