வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 10-ந் தேதி தேர்வு

நாமக்கல்லில் வருகிற 10-ந் தேதி 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1,421 பேர் எழுத உள்ளனர் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
வட்டார கல்வி அலுவலர் தேர்வு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார்.
அப்போது தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளுமாறும், தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி, காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலை பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பஸ்கள் ஏற்பாடு
தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்குள் காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்ப டமாட்டார்கள். எனவே தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்கண்ட தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தீயணைப்புத்துறை மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.