நெல் மூட்டைகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.11¼ லட்சம் மோசடி


நெல் மூட்டைகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.11¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:46 PM GMT)

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.11¼ லட்சத்தை மோசடி செய்த அரிசி ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

செஞ்சி தாலுகா அப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு நெல் வியாபாரம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சேவூரை சேர்ந்த அரிசி ஆலை நடத்தி வருபவரான ஜீனசெல்வம் (62) என்பவர் அறிமுகமானார்.

அப்போது ஜீனசெல்வம், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பணப்பட்டுவாடா செய்து வந்ததால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018 வரை குமார், அப்பம்பட்டில் உள்ள விவசாயிகளிடமிருந்து 100 கிலோ எடை கொண்ட 721 நெல் மூட்டைகளை பெற்று அதனை 2 லாரிகளில் ஏற்றி ஜீனசெல்வத்துக்கு அனுப்பினார். ஆனால் அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த ஜீனசெல்வம் அதற்கு கொடுக்க வேண்டிய பணமான ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜீனசெல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story