இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை
x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களுக்குள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 4-ந் தேதி மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் கடந்த 11-ந் தேதி மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 11 மீனவர்களும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் 11 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். அப்போது 10 ஆண்டுகளில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், அவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டது என்று தனது தீர்ப்பில் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் ஓரிரு நாட்களுக்குள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story