11-ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்ெடடுப்பு

திருப்பாச்சேத்தி அருகே 11-ம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
திருப்பாச்சேத்தி அருகே 11-ம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வு
திருப்பாச்சேத்தியை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மழவராயனேந்தலில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன், மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஆகியோர் வடக்குவாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு 11-ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை மற்றும் சூலக்கல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது:- இந்த கோவிலில் உள்ள ஒரு சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்த சிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த சிலை பைரவர் சிலை என்றும், அது 11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் அடையாளம் காணப்பட்டது.
பைரவர் சிலை
சிவ மூர்த்தங்கள் 64-ல் ஒன்றாக பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாக பைரவர் சிலை நின்ற கோலத்தில் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றை கையில் வைத்திருப்பதோடு நாய் வாகனத்தோடும் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே காணப்படும் பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும், ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கை அருள்பாலிக்கும் வகையிலும் காட்டப்பட்டு உள்ளன. கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையாக இருப்பதால் முகம் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. கோவிலுக்கு அருகில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவில் உள்ளது.
முந்தைய காலகட்டத்தில் இந்த கோவிலுக்குட்பட்ட நிலப்பகுதி கபாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகவும், தற்போது சொர்ண காளீஸ்வரர், சொர்ணவல்லி அம்மன் கோவில் என்ற பெயரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருந்ததாகவும், அக்கோவில் முற்றிலும் அழிவுற்ற நிலையில் அவ்விடத்தில் பழமையான நந்தி சிலை மற்றும் ஆவுடை சிலை இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன.
சூலக்கல்
அங்கிருந்தே இந்த பைரவர் சிலை காலப்போக்கில் வடக்குவாசெல்லியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சிவன் கோவிலுக்குரிய நிலங்கள் அளவிடப்பட்டு சூலக்கல் நடப்பட்டிருக்கும். அவ்வாறான சூலக்கற்கள் மக்கள் வழிபடும் கடவுளாகவும் மாறிப்போய் இருக்கின்றன.
இந்த கோவிலில் சூலக்கல் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. சிவன் கோவிலுக்கு அளவிட்டு வழங்கப்பட்ட எல்லைக்கல் காலப்போக்கில் எங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு நடப்பட்டு பின்பு வழிபாட்டுக்கு உரியதாக மாறி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.






