குமரியில் இன்று முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்


குமரியில் இன்று முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
x
தினத்தந்தி 21 Jun 2023 9:14 PM GMT (Updated: 22 Jun 2023 6:37 AM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. எனினும் விற்பனை குறையாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. எனினும் விற்பனை குறையாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுக்கடைகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதற் கட்டமாக தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதில் குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 110 மதுக்கடைகளில் 25 மதுக்கடைகளை மூடலாம் என்று அரசுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது 12 மதுக்கடைகள் மூடப்படப்பட உள்ளன. அதாவது நாகர்கோவில் பீச்ரோடு, இளங்கடை, செட்டிகுளம், வடசேரி பஸ் நிலையம் அருகே ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 4 மதுக்கடைகள் மூடப்படப்பட உள்ளன.

விற்பனை குறைவு

மேலும் அருமனை, பேயோடு, தக்கலை, இரும்பிலி, கழுவன்திட்டை, சாண்டம், அஞ்சுகிராமம், மருங்கூர் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளும் மூடப்பட இருக்கின்றன. மூடப்படும் மதுக்கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள கடைகள், விற்பனை குறைவாக உள்ள கடைகள் ஆகும். இந்த மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை மது விற்பனை நடந்து வந்துள்ளது.

அந்த வகையில் ரூ.12 லட்சம் வரை விற்பனை குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு கடை மூடப்பட்டால் அருகே உள்ள வேறொரு கடைக்கு சென்று மது பிரியர்கள் மதுபானத்தை வாங்கி செல்வார்கள். எனவே மொத்த விற்பனையில் பாதிப்பு இருக்காது என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story