பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல 12-ந்தேதி முதல் தடை


பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்ல 12-ந்தேதி முதல் தடை
x

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்ல வருகிற 12-ந்தேதி முதல் 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் பராமரிப்பு பணி சம்பந்தமாகவும், வனப்பகுதிகளில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மனித, வன விலங்கு மோதலை தடுக்கும் விதமாகவும், சரணாலயம் சுத்தம் செய்யும் பணிக்காக பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி வருகிற 13, 14-ந்தேதிகளில் மூடப்படுகிறது.

வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கள ஆய்வின்போது கோவில் அருகில் செல்லும் மின்பாதையை பாதுகாப்பான இடைவெளியுடன் சற்று உயர்த்துவதற்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவுப்படி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி ஆகியோர் ஆலோசனையின் பேரில் இளநிலை பொறியாளர் விஜயராஜ் தலைமையில் பணியாளர்களால் மின்ஒயர்கள் உயர்த்தப்பட்டது.


Next Story