நாமக்கல் மாவட்டத்தில், 4 மையங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


நாமக்கல் மாவட்டத்தில், 4 மையங்களில்  பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 4 மையங்களில் தொடங்கி உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 4 மையங்களில் தொடங்கி உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி முடிவடைந்தது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பிளஸ்-2 விடைத்தாள்கள் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளியிலும், காடச்சநல்லூர் எஸ்.பி.கே. மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்படுகின்றன. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனம் ஆகிய 2 மையங்களில் திருத்தப்படுகிறது.

முகாம் அலுவலர்கள்

ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலர் ராமன், எஸ்.பி.கே. மெட்ரிக் பள்ளி மையத்திற்கு திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் விஜயா ஆகியோர் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையத்தை பொறுத்த வரையில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தளிகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன், கே.எஸ்.ஆர். மையத்திற்கு வில்லிபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் ஆகியோர் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதல் நாளான நேற்று முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கினர். இன்று (வியாழக்கிழமை) முதல் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க உள்ளனர்.

ஒரு வாரத்தில் முடிக்கப்படும்

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பிளஸ்-2 விடைத்தாள்களை பொறுத்த வரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு 40,700 விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதை திருத்தும் பணியில் தலா 101 முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இதேபோல் உதவி தேர்வர்கள் 571 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதேபோல் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு 72,290 விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தலா 92 முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், 552 உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை பொறுத்த வரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு சுமார் 32 ஆயிரம் விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதை திருத்தும் பணியில் தலா 34 முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், 350 உதவி தேர்வர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு சுமார் 47 ஆயிரம் விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதை திருத்தும் பணியில் தலா 40 முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மற்றும் 400 உதவி தேர்வர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விடைத்தாள் திருத்தும் பணியை ஒரு வாரத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story