தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: விசாரணை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள் - மனம் திறக்கும் மக்கள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: விசாரணை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள் - மனம் திறக்கும் மக்கள்
x

22-5-2018-ந் தேதி என்பது நமது மனதில் நிழலாடும் ஒரு மறக்க முடியாத நாள்!

மனதில் சுமக்க முடியாத ஒரு சோகம் அன்று தூத்துக்குடியில் அரங்கேறியதை அசைப்போடாதவர் யாருமே இருந்திருக்க முடியாது.

ஆம்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம் அன்று கலவரமாகி, களோபரமாகி போலீசார் சுட்டுத்தள்ளியதில் அரிய உயிரை அப்பாவிகள் 13 பேர் இழக்க நேர்ந்ததை எவருமே எளிதாக நினைத்தோ, மறந்தோ கடந்து போய்விட முடியாது.

விசாரணை ஆணையம்

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன்வாலா பாக் படுகொலைபோல் கொடுமையாக நடத்தப்பட்டுவிட்டதோ என்று ஒரு தரப்பினர் அப்போது அங்காலாய்த்தது உண்டு.

இன்னொரு தரப்போ, அது நடத்தப்படவில்லை என்றால் 13 பேர் அல்ல, இன்னும் எண்ணற்ற உயிர்களை இழக்க நேர்ந்திருக்கக் கூடிய அபாயம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற அச்சம் வெளியிட்டதும் உண்டு.

இந்தச் சூழலில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வந்த, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் அளித்தது.

"துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய தீங்கைவிட துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏற்பட்ட தீங்கு அதிகமாக உள்ளது" என்று அதில் ஆணையம் குற்றம் சுமத்தி இருக்கிறது.

தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்ட அந்த விசாரணை அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குற்றச்சாட்டுகள்

இதோ, அதில் இடம்பெற்ற சில குற்றச்சாட்டுகள்.

* போலீசாரின் மோசமான திட்டமிடல். சரியாக உத்திகளை கையாளாத நிலை. ஆயத்தமின்மை ஆகியவை இந்தப் பிரச்சினையை பெரிதாக்கின.

* முன்எச்சரிக்கை ஏதும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு தொலைதூர மறைவிடத்தில் இருந்து நடத்தப்பட்டு இருக்கிறது.

* முதல் துப்பாக்கிச் சூடு நடந்த பின்புதான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த சில வாகனங்களுக்கும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு வாசிகளின் சில வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

தமிழ் மொழியே தெரியாத....

* தூத்துக்குடியில் கிளர்ச்சியும், குழப்பமும் இருந்த சூழ்நிலையில் பொறுப்பும், அதிகாரத்திலும் இருந்த கலெக்டர் வெங்கடேஷ் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேறி நடத்தாமல் மூன்றாம் நிலையில் உள்ள சப்- கலெக்டர் பிரசாந்தை அந்த சூழ்நிலையை கையாளவிட்டது தனது பொறுப்பை தட்டிக் கழித்ததாக அமைந்துள்ளது.

* தூத்துக்குடி,நெல்லை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் இல்லாமல் தமிழ் மொழியே தெரியாத ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கு போராட்டத்தை ஒடுக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

17 ரவுண்டு

* ஒரு பயங்கர போராட்டக் கூட்டத்தை எதிர்ப்பது போல் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க முடியவில்லை. தனி ஆளாக சுடலைக்கண்ணு 17 ரவுண்டுகளை அதுவும் அபாயமான 'செல்ப் லோடிங்' துப்பாக்கியால் சுட்டுயிருக்கிறார். போலீசார் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர் என்பதுதான் ஆணையத்தின் முடிவு. 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாகிறார்கள்.

இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி-ரஜினிகாந்த்

அதோடு மட்டுமல்ல, அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியையும், துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தையும் விசாரணை ஆணையம் விட்டுவைக்கவில்லை. விமர்சனம் செய்திருக்கிறது.

தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களையும் அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் உயர் அதிகாரிகள் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்தனர்.

அவ்வாறு இருக்க அந்த சம்பவம் பற்றி ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து.

சமூகவிரோதிகள் நுழைந்து போலீசார் மீது தாக்குதலை நடத்தினர் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறிவிட்டு பின்னர் அந்த கருத்துக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். இது போன்ற கருத்துக்களை புகழ்பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், சினிமா நடிகர்கள் தவிர்ப்பது நல்லது என்று ஆணையம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

ஆணையம் சிபாரிசு

உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதனால் வேகம் பெற்றிருக்கும் இந்த விவகாரம் குறித்து பொதுமக்களும், பொதுநல விரும்பிகளும் வெளியிட்டு இருக்கும் கருத்துகளை கீழே காணலாம்.

பாராட்டுக்கள்




தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதிநாதன்:-

தமிழக அரசு நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட்டு இருப்பதற்கு பாராட்டுக்கள்.

போராட்டம் நடந்த நாளில் தூத்துக்குடி மக்கள் முழுமையாக கூடி இருந்தனர். கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் குறிபார்த்து அடித்தனர். இதனால் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். பலரை கைது செய்து கடுமையாக தாக்கினார்கள். அதே போன்று அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டு விட்டது. இதனை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை வெளிக்கொண்டு வந்து உள்ளது.

மனு வாங்குவதை நிறுத்த வேண்டும்




தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் வாரியார்:-

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களையும், மக்களையும் பாதுகாப்பதற்காக சுட்டதாக போலீசார் கூறுகின்றனர். இதற்கு முன்பு பல போராட்டங்களில் போலீசார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி மக்களை கலைத்து உள்ளனர். இந்த போராட்டத்தை போலீசார் சரியான முறையில் கையாளவில்லை என்றே கருதுகிறேன்.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் தடுப்பதற்கு, ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் இருக்கும் நிலையில், மாவட்ட கலெக்டர் ஆதரவாளர், எதிர்ப்பாளர்களிடம் மனு வாங்குவதை நிறுத்த வேண்டும். இதனால் பதற்றமான சூழல்தான் நிலவி வருகிறது.

தவிர்த்து இருக்கலாம்

தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, அதிகாரிகள் பொதுமக்களிடம் முதலிலேயே பேசி இருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது அதிகபட்ச நடவடிக்கையாக கருதுகிறேன். உயர் அதிகாரிகள் நேரடியாக பேசி இருந்தால் எளிதில் பிரச்சினையை தீர்க்க முடியும். போலீஸ் அதிகாரி மீது கல்வீசப்பட்டால், அவருக்கு காவலாக நிற்கும் கன்மேன் சுட ஆரம்பித்து விடுவார். ஆனால், அவரை அந்த அதிகாரிதான் பொறுமையாக இருக்குமாறு தடுக்க வேண்டும். வரும்முன் காப்போம் என்ற நிலையில் போலீசார் செயல்பட்டு இருக்க வேண்டும். போலீசார் ஓபன் பயர் செய்ததை தவிர்த்து இருக்கலாம்.

தொடர்பு இல்லை



தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க தலைவர் தியாகராஜன்:-

தமிழக அரசு நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த உண்மையை நீதியரசர் கூறி விட்டார்.

2018-ம் ஆண்டு ஆலையை பூட்டும் போது, அப்போதைய முதல்-அமைச்சர் துப்பாக்கி சூடு சம்பவத்தை காரணம் காட்டினார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஸ்டெர்லைட்தான் காரணம் என்று பலரும் வதந்தியை பரப்பினார்கள். தற்போது அந்த வதந்திக்கு விடை கிடைத்து இருப்பதாக பார்க்கிறேன். துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருந்து இருந்தால், ஆலையை திறந்து இருப்பார்கள். தற்போது தொடர்பு இல்லை என்பது தெரியவந்து இருப்பதால் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஆர்வலர்



நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் வியனரசு:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் குற்றம் சாற்றியுள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கி சூட்டை அடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக நான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு சிறையிலிருந்தபடியே 16 பக்க அறிக்கை அனுப்பினேன். நான் எனது மனுவில் தெரிவித்த பல கருத்துக்களை விசாரணை ஆணையம், அறிக்கையில் கூறி இருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.

அதுபோல் துப்பாக்கி சூடு குறித்து கருத்து சொன்ன நடிகர் ரஜினிகாந்த், போராடிய மக்களை மிகவும் கொச்சைப்படுத்தினார். இதுகுறித்து ஆணையம் ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஐ.நா. சபை கண்டித்தது



நெல்லையை சேர்ந்த சிவா:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீசார் விதிமுறைகளை மீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது தரையில் முள்வேலிகளை போட்டனர். இதை ஐ.நா. சபை கண்டித்தது. அதேபோல் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் மனித உரிமை மீறலாகும்.

மாபெரும் தவறு



தென்காசி மவுண்ட் ரோடுபகுதியை சேர்ந்த சலீம்:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில், அந்த மக்கள் தங்களது உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக போராடினர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் கலந்து கொண்ட சாதாரண பொதுமக்களை சுட்டுக் கொன்றது எந்த வகையில் நியாயம்? இது மாபெரும் தவறு. இந்த சம்பவத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் இதற்கு துணை போனவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story