13, 14-ந்தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்


13, 14-ந்தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2022 6:45 PM GMT (Updated: 10 Oct 2022 6:46 PM GMT)

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் ரத வீதிகளில் 13, 14-ந்தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது

தென்காசி

தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிசான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகள், அம்மன் சன்னதி பஜார், சுவாமி சன்னதி பஜார், கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, மேல ஆவணி மூல வீதி, மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் முன்பக்கம் சாலையில் கடையை நீடிப்பு செய்தும், வியாபார பொருட்களை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் இந்த பகுதிகளில் பழம், பருத்தி பால், சர்பத், கடலை, பூக்கடை போன்றவற்றை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்வதால் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகப்படியான மக்கள் இப்பகுதிக்கு பொருட்களை வாங்க வந்து செல்வதால் இந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே வருகிற 12-ந்தேதிக்குள் இந்த பகுதிகளில் முன்புறம் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையையும் ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து வசூல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story