13-ம் நூற்றாண்டு குறுநில மன்னரின் சிற்பம் கண்டெடுப்பு


13-ம் நூற்றாண்டு குறுநில மன்னரின் சிற்பம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே ஆற்காடு கிராமத்தில் 13-ம் நூற்றாண்டு குறுநில மன்னரின் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் இருக்கிறது ஆற்காடு கிராமம். இப்பகுதியில் கி.பி.10-ம் நூற்றாண்டு சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத்தடயங்கள் இருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கி.பி. 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் உள்ளிட்ட புதிய தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுபற்றி விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:-

ஆற்காடு கிராம பகுதியில் தலையில்லாத சிற்பம் ஒன்றும் களஆய்வில் கண்டறியப்பட்டது. இது கி.பி. 1,212 முதல் கி.பி. 1,231 வரை கெடிலம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பமாகும். இம்மன்னனின் முழு உருவச்சிலை ஆற்காடு கிராமத்திற்கு அருகில் உள்ள ஆ.கூடலூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் கடவுள் சிலையாக வழிபட்டு வருகின்றனர். இந்த சிற்பம் ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டதாகும். சோழ மன்னன் 3-ம் ராஜராஜனை சிறை வைத்தவன் எனும் பெருமை படைத்தவன் கோப்பெருஞ்சிங்கன். சகலபுவனச் சக்கரவர்த்தி, அவனி ஆளப்பிறந்தான் உள்ளிட்ட விருது பெயர்களால் அழைக்கப்படும் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் காணப்படுகிறது. அதற்கடுத்து விழுப்புரம் அருகே உள்ள ஆற்காடு, ஆ.கூடலூர் கிராமங்களில்தான் தனிச்சிற்பங்களாக காணப்படுகின்றன. குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கும் ஆயந்தூர், ஆ.கூடலூர், ஆற்காடு ஆகிய கிராமங்களுக்கும் உள்ள தொடர்புகள், ஆற்காடு கல்வெட்டில் குறிப்பிடப்படும் சம்புவராயர், அங்கிருந்த சிவன் கோவில் குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story