ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவு
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் விஜயலலிதா குமாரி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அவர், அந்த வங்கியில் பணத்தை ைவப்புத்ெதாகையாக செலுத்தினால் பொதுமக்களுக்கு வைப்புத்தொகைக்கு வழங்கப்படும் வட்டித்தொகையை விட, அவருக்கு முன்னாள் ஊழியர் என்ற அடிப்படையில் ஒரு சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும் என்று அவரிடம், அந்த வங்கியின் தியாகராய நகர் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயலலிதா குமாரி தனது குடும்பத்தில் உள்ள 8 பேரின் பெயர்களில் தம்மையும் கூட்டாக சேர்த்து சுமார் ரூ.4 கோடி வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளார். இதையடுத்து வங்கியில் இருந்து கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்து பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெபாசிட் தொகைக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஒரு சதவீத வட்டியை தர முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலலிதா குமாரி குடும்பத்தினர், வைப்புத்தொகை வைத்துள்ள 8 பேருக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டித்தொகையை வங்கி வழங்க வேண்டும் என்று கோரி தனித்தனியாக சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த 8 வழக்குகளும் விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் கூடுதலாக வட்டி தருவதாக வங்கி அளித்த வாக்குறுதியின் காரணமாக டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை தன்னிச்சையாக குறைத்தது சேவை குறைபாடு. எனவே ரவீந்திரா, அர்ச்சனா, ரவீந்தர், பிரதீபா, சிரிஸ், அனுஷ்கா, சோபனா, சுனில் ரமணா ராவ் ஆகியோருக்கு வங்கி ஒப்புக்கொண்டு டெபாசிட் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி கூடுதல் வட்டி தொகை ரூ.11 லட்சத்து 50 ஆயிரமும், சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும் நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


Next Story