438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

அமைப்புசாரா பனை மர தொழிலாளர்கள் 438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

அமைப்புசாரா பனை மர தொழிலாளர்கள் 438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியம் மூலம் 438 பயனாளிகளுக்கு ரூ.15.08 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில் நவாஸ் கனி எம்.பி., பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பனைமரத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் கடந்த 2 ஆண்டுகள் வரை 18-க்கும் மேற்பட்ட நல வாரியங்கள் அமைத்து அதற்கான தலைவர்களும் நியமித்து ஒவ்வொரு வாரியத்திற்கும் அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரணம் நிவாரணத்தொகை, விபத்து மரணம் உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரணம் நிவாரணத்தொகை என பல்வேறு வகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 18 வகையான நல வாரியங்கள் மூலம் 1,08,680 பேர் பதிவு செய்தனர். மேலும் பதிவு செய்யாதவர்கள் தங்களுக்குரிய நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை பெற வேண்டும். உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் குணசேகரன், ஒன்றிய குழு தலைவர்கள் மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி புல்லாணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கவிதா கதிரேசன், பனைமர தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் கலாவதி மற்றும் விசுவநாதன் உள்ளிட்டவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் யூனியன் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story