அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பஸ்

வேர்க்கிளம்பி சாணிவிளை பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் சம்பவத்தன்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது முகேஷ் தனக்கும், தனது மனைவிக்கும் பயண டிக்கெட் எடுத்துள்ளார். 1¾ வயதான பேரக்குழந்தைக்கு விதிமுறைக்குட்பட்டு பயண டிக்கெட் எடுக்கவில்லை.

பணகுடி பகுதியில் பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள் முகேசிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது அவருக்கும், மனைவிக்குமான டிக்கெட்டை கொடுத்துள்ளார். மேலும் குழந்தைக்கான டிக்கெட் எடுக்க வேண்டும் என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரூ.50 கொடுத்து குழந்தைக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துள்ளார். மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் தங்களுக்கான 2 பயண டிக்கெட்டுகளை வாங்கி சென்றுவிட்டனர்.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இதனால் பணகுடியில் இருந்து திருச்செந்தூர் வரை டிக்கெட் இல்லாத அச்சத்தில் முகேசும், அவரது மனைவியும் பயணித்துள்ளனர். இதன் காரணமாக மனவேதனை அடைந்த முகேஷ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் அரசு போக்குவரத்து கழக சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட முகேசுக்கு ஏற்கனவே பெறப்பட்ட டிக்கெட் கட்டணம் ரூ.50 வழங்கிடவும், அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.


Next Story