சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலுக்கு ரூ.1,620 கட்டணம்


சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலுக்கு ரூ.1,620 கட்டணம்
x

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலில் சாதாரண இருக்கை பயண கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.1,620 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை எழும்பூர்-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 முதல் 11.30 மணிக்குள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடு நடந்து வருகிறது.

சோதனை ஓட்டம் வெற்றி

இந்த ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கால அட்டவணைபடி நேற்று காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்தது.

விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே 'வந்தே பாரத்' ரெயில் வந்தது. அதை தொடர்ந்து சென்னை எழும்பூரை வந்தடைந்தது. 7.50 மணி நேரத்தில், அதாவது பிற்பகல் 1.50 மணிக்கு வர வேண்டிய ரெயில் முன்கூட்டியே வந்து சேர்ந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை

இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் கூறியதாவது:-

காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'வந்தே பாரத்' சரியாக மதுரைக்கு 7.45 மணிக்கு வந்து சேர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 5 நிமிடத்திற்கு முன்பாகவே மதுரைக்கு வந்தது.

நவீன வசதியுடன் இருக்கைகள், விமானத்தில் செல்வது போல அனைத்து வசதிகளும் இந்த ரெயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்டரில் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்க தண்டவாளங்களை மேம்படுத்தப்படும் பணி முதற்கட்டமாக திண்டுக்கல் முதல் திருச்சி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படுக்கை வசதி

தற்போது 'வந்தே பாரத்' ரெயிலானது, இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு இரவு நேரங்களில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் படுக்கை வசதியுடன் 'வந்தே பாரத்' ரெயில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் எவ்வளவு?

மேலும், சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு, ஜி.எஸ்.டி., முன்பதிவு என அனைத்தும் சேர்த்து சாதாரண இருக்கை கட்டணம் ரூ.1,620 ஆகவும், எக்சிகியூடிவ் இருக்கை கார் கட்டணம் ரூ.3 ஆயிரத்து 25 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ரெயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் விருதுநகர், மதுரை, விழுப்புரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயிலை வரவேற்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரெயில் புறப்படும் நேரத்தை மாற்ற கோரிக்கை

'வந்தே பாரத்' ரெயிலை நெல்லையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்துவதற்கு விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் நெல்லை சந்திப்புக்கு காலை 6 மணிக்குள் வந்து சேருவதில் சிரமங்கள் இருப்பதால், 'வந்தே பாரத்' ரெயில் நெல்லையில் இருந்து புறப்படும் நேரத்தை 6 மணிக்கு பதில், காலை 7 மணிக்கு மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நெல்லைக்கு திரும்பி வருவதற்கு நள்ளிரவு ஆகி விடும் என்று கூறப்படுகிறது. இந்த கால விரயத்தை தவிர்க்க சென்னை எழும்பூரில் ரெயில் நிறுத்தி வைக்கும் நேரத்தை குறைத்து, தற்போது திட்டமிட்டுள்ளபடி மதியம் 2.50 மணிக்கு ரெயில் புறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story