ரூ.1.66 கோடியில் நலத்திட்ட உதவிகள்


ரூ.1.66 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 Sep 2023 7:30 PM GMT (Updated: 13 Sep 2023 7:30 PM GMT)

ராஜபாளையத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1,66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1,66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

திட்ட முகாம்

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மொத்தம் 325 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது, ஏழை எளிய கிராமப்புற மக்கள் நமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு

மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் வளரக்கூடிய நாவல், கொய்யா, கொடிக்காய் போன்ற மரங்களால் அதிக வருவாய் பெறக்கூடிய விவசாயிகள் உள்ளனர். மேலும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற நலத்திட்டங்கள் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

அரங்கு

முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி தண்டபாணி, தனித்துறை ஆட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story