வேலைவாய்ப்பற்ற 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை: கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை:  கலெக்டர் தகவல்
x

வேலைவாய்ப்பற்ற 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தேனி கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருந்தால் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், காலாண்டுக்கு 10-ம் வகுப்பு தோல்வியான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டுக்கு ரூ.1,800, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 5 காலாண்டு கால கட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையாக மொத்தம் 1,692 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story