ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 17 மீனவர்கள் விடுவிப்பு


ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள்  உள்பட 17 மீனவர்கள் விடுவிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

இலங்கை சிறையில் பரிதவித்த ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 17 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் பரிதவித்த ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 17 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

17 மீனவர்கள் விடுவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இருந்து கடந்த 13-ந்தேதி 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த 17 மீனவர்களும் நேற்று இலங்கையின் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 17 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இனி எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வந்தால் 1½ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், பறிமுதல் செய்த படகுகளின் மீதான விசாரணை டிசம்பர் 5-ந் தேதி நடைபெறும் என்றும், அன்று படகுகளின் உரிமையாளர்கள் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏமாற்றம்

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இலங்கை சிறையில் தவித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாததால் மீனவர்கள் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.


Related Tags :
Next Story