9 மாணவா்கள் உள்பட 17 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி


9 மாணவா்கள் உள்பட 17 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி
x
தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:47 PM GMT)

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 9 பள்ளி மாணவா்கள் உள்பட 17 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 9 பள்ளி மாணவா்கள் உள்பட 17 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்

இன்புளூயன்சா எச்3 என்2 எனப்படும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 36 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அவர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்களிடம் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி முதல் நாளில் நடந்த முகாமில் மொத்தம் 2,967 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 மாணவ, மாணவிகள் உள்பட 10 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

7 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் 2-வது நாளாக நடந்த சிறப்பு முகாமில் 2,501 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. கொரோனா பாதிப்பு ஒருவருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 102 பேருக்கு சளி பாதிப்பும் உள்ளது. அவர்களில் 53 பேர் மாணவர்கள் ஆகும். இவ்வாறு 2 நாட்களில் 9 மாணவா்கள் உள்பட 17 பேருக்கு வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே வைரஸ் காய்ச்சல் அறிகுறி மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குமரி மாவட்டத்தில் உள்ள சில அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.


Next Story