சாலைகளில் தேங்கும் மண்ணை அகற்ற ரூ.1.71 கோடி செலவில் வாகனம்- அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்


மதுரை நகர சாலைகளில் உள்ள மண்ணை அகற்ற ரூ.1.71 கோடி செலவில் 2 புதிய மண் கூட்டும் வாகனங்களை மாநகராட்சி வாங்கி உள்ளது. அதன் செயல்பாட்டினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை


மண் குவியல்

மதுரை நகர சாலைகளில் தேங்கி நிற்கும் மணல் குவியலால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆங்காங்கே வாகனங்கள் சறுக்கி விபத்துகளும் அரங்கேறுகின்றன. அதே போல் பலமாக காற்றடித்தால் மண் சுழற்சியும் ஏற்படுகிறது. இந்த சாலைகளில் தேங்கி இருக்கும் மணலை அகற்றுவது துப்புரவு பணியாளர்களால் இயலாத காரியம். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் 2 மண் கூட்டும் எந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த வாகனங்களால் அதிக அளவு சாலைகளில் உள்ள மண்ணை அப்புறப்படுத்த முடியவில்லை.

எனவே கூடுதலாக 2 வாகனங்களை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதன்படி தலா ஒரு வாகனம் ரூ.85 லட்சத்து 87 ஆயிரம் செலவில் 2 வாகனங்களை ரூ.1 கோடியே 71 லட்சத்து 74 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டு உள்ளது. அதன் சேவையை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.

நேதாஜி சாலை

மதுரை அய்யர்பங்களாவில் அமைச்சர் மூர்த்தி, இந்த வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல் மதுரை நேதாஜி சாலையில் இந்த வாகனத்தின் சேவையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வாகனம், நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டது.


Next Story