தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 ஆயிரத்து 536 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 ஆயிரத்து 536 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 ஆயிரத்து 536 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், தேசிய-மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் படி அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தினை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 2-ம் அமர்வில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் தலைமை தாங்கினார். அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் அறிவு, கற்பகவள்ளி ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். செந்துறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ் ஜெபகிருபா, வக்கீல் அல்லி ஆகியோர்கலந்து கொண்டனர். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் உறுப்பினர் லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்குகளுக்கு தீர்வு

இந்த நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் வழக்குகள், வங்கி வழக்குகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்குகள், நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 19 ஆயிரத்து 536 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 89 ஆயிரத்து 391-க்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள், வக்கீல்கள், போலீசார், அரசு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story