மொபட் திருடிய 2 பேர் கைது


மொபட் திருடிய 2 பேர் கைது
x

நாமக்கல்லில் மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள தும்மங்குறிச்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது34). கூலிதொழிலாளி. அவரது மனைவி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு உதவியாக, கடந்த மாதம் 26-ந் தேதி காலை மருத்துவமனையில் உள்ள டீ கடையில், தனது மொபெட்டை நிறுத்திவிட்டு சென்றார். அன்று மாலை வந்து பார்த்தபோது மொபெட் திருட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

அதேபோல், நாமக்கல்– பரமத்தி சாலை, இ.பி., காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (28). அவர், நேற்றுமுன்தினம் காலை தனது தாயாரின் மொபட்டை எடுத்துக் கொண்டு, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் மருந்து வாங்க வந்தார். மருந்து வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த மதன்ராஜ், இது குறித்து, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இவ்விரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, திருடு போன மொபட்டுகளை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மொபட்டுகளை திருடியது, கரூர் மாவட்டம், வேப்பம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (45), நாமக்கல் போதுப்பட்டி அடுத்த லக்கம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story