பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது
![பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/22/1463508-arrested001.webp)
கடலூரில் பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் இருந்து சி.என்.பாளையம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் கண்டக்டராக நெல்லிக்குப்பம் கே.ஏ.நத்தம் பகுதியை சேர்ந்த தயாளன் (வயது 46) என்பவரும், டிரைவராக சிவக்குமார் என்பவரும் பணியில் இருந்தனர். அந்த பஸ் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சென்ற போது, குழந்தை காலனியை சேர்ந்த ரவி மகன் அபிஷேக் (19), கொடிக்கால்குப்பம் ஆறுமுகம் மகன் தீபன் (19) ஆகிய 2 பேரும் பஸ்சின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது. இதை பார்த்த தயாளன் அவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தயாளனை ஆபாசமாக திட்டி தாக்கி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக தெரிகிறது. இது பற்றி தயாளன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபிஷேக், தீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.