இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது


இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது
x

வேடசந்தூரில், இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

முட்டை வியாபாரி

கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர் சரக்கு வாகனத்தில் ஊர், ஊராக சென்று முட்டை வியாபாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி, வேடசந்தூர் பஸ் நிலைய பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, சரக்கு வாகனத்தை அப்பகுதியில் நிறுத்திவிட்டு மருந்து கடையில் செல்வி மாத்திரை வாங்க சென்றார். சரக்கு வாகனத்துடன், டிரைவர் மூர்த்தி மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.

இரும்புகம்பியால் தாக்குதல்

இந்தநிலையில் அங்கு மீன்கடை நடத்தி வரும் முருகேசன் (50) என்பவர் மூர்த்தியிடம், இங்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த செல்வி, முருகேசனிடம் தட்டிக்கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன், இரும்பு கம்பியால் செல்வியை சரமாரியாக தாக்கினார். முருகேசனுடன் சேர்ந்து, வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்த ஹேமநாத் என்ற பாபு (40) என்பவரும் செல்வியிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது.

செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

தாக்குதலில் காயம் அடைந்த செல்வி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் தாந்தோணிமலை குமரன் சாலையில் உள்ள 200 அடி உயர தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தற்கொலை மிரட்டல்

தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி செல்வியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவரோ, தன்னை யாராவது காப்பாற்ற முயன்றால் இங்கிருந்து குதித்து விடுவேன் எனவும், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார், உறவினர்கள் ஒலிபெருக்கி மூலம் செல்வியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதியம் 12.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, செல்வியின் இடுப்பில் கயிற்றை கட்டி, அவரை பத்திரமாக மீட்டனர்.

2 பேர் கைது

இதற்கிடையே செல்வியை தாக்கிய வழக்கில் தொடர்புடைய முருகேசன், ஹேமநாத் என்ற பாபு ஆகியோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-------


Next Story