குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


வடமதுரை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் தற்போது கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த வீரமணி. இவர் திண்டுக்கல்லில் நகைக்கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கம்மாளப்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்திய அவர்கள் அன்னதானம் சாப்பிடுவதற்காக சென்றனர்.

குட்டையில் மூழ்கிய சிறுவர்கள்

அப்போது தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும் (வயது 9), வீரமணியின் மகன் சர்வினும் (6) கோவிலுக்கு அருகில் உள்ள குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை பார்த்தனர். உடனே அவர்களுக்கும் நண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்கிடையே குட்டையில் நண்டு பிடித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து குட்டை பகுதிக்கு சென்ற 2 சிறுவர்களும் நண்டு பிடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் குட்டைக்குள் தவறி விழுந்தனர். குட்டையில் தண்ணீர் குறைந்த அளவே இருந்தாலும் இருவரும் சிறுவர்கள் என்பதால் தண்ணீரில் மூழ்கினர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே தங்களின் மகன்களை காணாமல் வீரமணியும், தங்கமணியும் தேடினர். அப்போது குட்டை அருகே சிறுவர்களின் காலணிகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் ஓடிச்சென்று குட்டையில் மூழ்கி கிடந்த சிறுவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லத்தீஷ் வினியும், சர்வினும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story