வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x

வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

திண்டுக்கல்
வடமதுரை:

கோபால்பட்டி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த நர்சிங் மாணவியான ஆர்த்தி (19) என்பவருக்கும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஆனால் இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கார்த்திக்ராஜாவும், ஆர்த்தியும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மணமக்கள் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில் நொச்சியோடைபட்டியை சேர்ந்தவர் சாலினி (19) என்பவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அஜித்குமாரும், சாலினியும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, காதல் ஜோடியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story