2 சந்தன மரங்களை வெட்டிச்சென்ற மர்மநபர்கள்


2 சந்தன மரங்களை வெட்டிச்சென்ற மர்மநபர்கள்
x

2 சந்தன மரங்களை வெட்டிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆண்டிகுரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமர தோப்பு அமைப்பதற்காக, சந்தன மரக் கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளார். நாராயணசாமியால் தொடர்ந்து அவற்றை பராமரிக்க முடியாததால் இரண்டு மரக்கன்றுகளை விட்டுவிட்டு மீதமுள்ள மரக்கன்றுகளை அழித்து மீண்டும் வயலாக மாற்றி உள்ளார். 2 சந்தன மரக்கன்றுகளை கடந்த 12 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வயலுக்கு சென்ற நாராயணசாமி சந்தன மரங்களையும் வயலையும் பார்த்துவிட்டு மாலை வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் வயலுக்கு வந்து பார்த்தபோது நன்றாக வளர்ந்து இருந்த 12 வயதுடைய 2 சந்தன மரங்களை மர்ம கும்பல் வேரோடு வெட்டி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாராயணசாமி சந்தன மரங்களை வளர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினரிடம் அனுமதி பெற்றுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story