நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்


நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்
x

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல் வனத்துறை நடவடிக்கை.

வளசரவாக்கம்,

சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11-வது தெருவில் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், பின்னர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார். அஜித்குமாரின் 'விஸ்வாசம்', தனுசின் 'மாரி' உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் காமெடியனாக நடித்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீடு குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது வீட்டில் 2 கிளிகள் வளர்ப்பது குறித்து கூறி இருந்தார். இதுபற்றி யாரோ வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story