ரெயில்வே பெண் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


ரெயில்வே பெண் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x

ரெயில்வே பெண் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 35). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிவண்ணன். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விஜயலட்சுமி மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று காலை மணிவண்ணன் குளியலறைக்கு குளிக்க சென்றார். அப்போது விஜயலட்சுமி வீட்டில் உள்ள அறையில் உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் குளித்து விட்டு வந்த மணிவண்ணன் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மணிவண்ணன் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி அருகே உள்ள சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் தினேஷ் (25). இவருக்கு திருமணமாகி சீதாதேவி (23) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மதுபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த தினேசுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தினேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story