சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி


சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மின்கசிவால் ‘பிரிட்ஜ்’ வெடித்து சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலியாகினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மின்கசிவால் 'பிரிட்ஜ்' வெடித்து சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ் இன்ஸ்பெக்டர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளியை சேர்ந்தவர் சபரிநாத்(வயது 42). சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களது மகன் ஸ்ரீராம்வர்சத்(15), உடுமலையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

சபரிநாத்துக்கு சொந்தமான வீடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ளது. இங்கு அவர், அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வீடு, தரைத்தளம் மற்றும் மேல் தளம் கொண்டது. தரைத்தளத்தில் உள்ள வீட்டில் கணவரை பிரிந்து வாழும் சாந்தி(37) என்பவர் தனது மகன் அஷ்வினுடன்(15) வாடகைக்கு வசித்து வந்தார். மேல் தளத்தில் உள்ள வீட்டை சபரிநாத் பயன்படுத்தி வந்தார். அங்கு அவர், கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து தங்கியிருந்தார்.

உடல் கருகியது

இந்த நிலையில் அவரது வீட்டில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சமையல் அறையில் கடும் புகை மூட்டமாக இருந்தது. மேலும் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் தங்களது உடலில் தீப்பற்றிய நிலையில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டு கொண்டு இருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கணபதி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் சபரிநாத், சாந்தி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்து விட்டனர்.

'பிரிட்ஜ்' வெடித்து தீ

இதை அறிந்து வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அனந்தநாயகி மற்றும் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில், மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி(பிரிட்ஜ்) வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் எதிர்பாராத தீ விபத்தால் சபரிநாத், சாந்தி ஆகியோர் இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வீட்டில், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் சாந்தி எதற்காக அங்கு சென்றார், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை, தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story