பெண் உள்பட 2 பேர் மர்மச்சாவு


பெண் உள்பட 2 பேர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 18 Oct 2023 10:00 PM GMT (Updated: 18 Oct 2023 10:01 PM GMT)

செந்துறை, சாணார்பட்டி பகுதிகளில் பெண் உள்பட 2 பேர் மர்மமாக இறந்துள்ளனர்.

திண்டுக்கல்

தூக்கில் தொங்கிய பெண்

செந்துறை அருகே உள்ள ஆவிச்சிபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் சின்னழகு (வயது 35). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி அம்பிகா (27). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை அம்பிகா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அம்பிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பிகாவின் தந்தை பிச்சன், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி மர்மச்சாவு

சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் முருகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு முருகேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story